தமிழ் புத்தாண்டு விடுமுறைக்கு கூடுதல் பேருந்துகள் – போக்குவரத்து துறை அறிவிப்பு

தமிழ் புத்தாண்டு பண்டிகைக்கு சென்னையில் இருந்து  கூடுதலாக 500 பேருந்து இயக்கப்படும் என போக்குவரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏப்.14ம் தேதி  தமிழ்புத்தாண்டு உடன் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருவதால் பயணிகள் வசதிக்காக சென்னையில்…

தமிழ் புத்தாண்டு பண்டிகைக்கு சென்னையில் இருந்து  கூடுதலாக 500 பேருந்து இயக்கப்படும் என போக்குவரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏப்.14ம் தேதி  தமிழ்புத்தாண்டு உடன் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருவதால் பயணிகள் வசதிக்காக சென்னையில் இருந்து நாளை கூடுதலாக 500 பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் புத்தாண்டு மற்றும் ரம்ஜான் பண்டிகை என தொடர் விடுமுறை வருவதால் வெளியூர் செல்லும் மக்களின் வசதிக்காக சென்னையில் இருந்து 1000 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் 11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் முழு ஆண்டு தேர்வு நடைபெற இருக்கிறது.

கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் பேருந்து பயணம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் புனித வெள்ளி, அரசு விடுமுறை என்பதால் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை கிடைத்தது. இதனால் வெளியூர் பயணம் அதிகரித்தது. சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.

வரும் 14ம் தேதி வெள்ளிக்கிழமை தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. அதைத் தொடர்ந்து 22ம் தேதி ரம்ஜான் பண்டிகை வருகிறது. இதனால் வெளியூர் பயணம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தொடர்ந்து விடுமுறை நாட்கள் வருவதால் கூடுதலாக 1000 பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழகங்கள் திட்டமிட்டுள்ளது.

தமிழ் புத்தாண்டு வெள்ளிக்கிழமை வருவதால் 13ம் தேதி வியாழக்கிழமை 500 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்படுவதால் மக்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கருதி சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதே போல ரம்ஜான் பண்டிகை 22ம் தேதி வருவதால் 21ம் தேதி வெள்ளிக்கிழமை 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

இது குறித்து போக்குவரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த வாரம் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. அதனால் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதேபோல தமிழ் புத்தாண்டு மற்றும் ரம்ஜானையொட்டி விழுப்புரம், சேலம், கும்பகோணம், கோவை, மதுரை போக்குவரத்து கழகங்கள் மூலம் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். வழக்கமாக இயக்கப்படும் 2,100 பஸ்களுடன் கூடுதலாக 500 பஸ்கள் வீதம் இயக்க திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.