சென்னை ஆதம்பாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த வழக்கில் சக்திவேல் என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை ஆதம்பாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி சுந்தரியை கொலை செய்து அவரிடம் இருந்த நகை மற்றும் பணம் கொள்ளையடித்து செல்லப்பட்டது. மூதாட்டி சுந்தரி கொலை குறித்து விசாரிப்பதற்காக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதனையடுத்து தீவிர விசாரணையில் ஈடுபட்ட காவல்துறையினர், கொள்ளையடித்த வழக்கில் சக்திவேல் என்ற நபரை கைது செய்தனர்.
மூதாட்டி சுந்தரி வீட்டை சுற்றி இருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் கே.கே.நகரைச சேர்ந்த சக்திவேலை கைது செய்த போலீசார், அவரிடம் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மூதாட்டியிடம் இருந்து சக்திவேல் கொள்ளையடித்த நகைகள் வெவ்வேறு நகை கடைகளில் விறக்கப்பட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சக்திவேல் விற்ற கடைகளில் இருந்து 45 சவரன் நகைகைளை மீட்டனர். அவருக்கு வேறு கொள்ளை சம்பவங்களிலும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக காவல்துறை கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஆதம்பாக்கம் மூதாட்டி சுந்தரி கொலை வழக்கில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. சி.சி.டி.வி மற்றும் அருகில் வசிப்பவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கே.கே.நகைரைச் சேர்ந்த சக்திவேல் என்பவரை கைது செய்துள்ளோம். அவரிடம் இருந்து 42 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யபட்டுள்ளது.
மேலும் இதே போன்று கே.கே.நகரில் கொலை செய்யப்பட்ட சீதாலட்சுமி என்ற மூதாட்டி கொலை வழக்கிலும் கைது செய்துள்ளோம். சக்திவேல் இதுவரை இரண்டு மூதாட்டிகளை பணம் நகைக்காக கொலை செய்துள்ளார். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மூதாட்டிகளை குறிவைத்து கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. தனியாக வசிக்கும் முதியவர்கள் இது போன்று சந்தேகம் இருந்தால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வலியுறுத்துவதாக ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா கேட்டுக்கொண்டுள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா








