கணவருக்கு எதிராக கொடுத்த புகாருக்கு, போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என திரைப்பட நடிகை ராதா குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை சாலிகிராமத்தை சேர்ந்தவர் ராதா(38). சுந்தரா டிராவல்ஸ் படத்தில் கதாநாயகியாக நடித்தவர். இவர் பரங்கிமலையில் உள்ள இணை கமிஷனர் நரேந்திரன் நாயரை சந்தித்து நேற்று புகார் மனு தந்தார்.
அந்த மனுவில், “கடந்த ஏப்ரல் மாதம் 14ந் தேதி எனது கணவரும் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டருமான வசந்தராஜா மீது விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்தேன். இந்த புகார் மீது விசாரிக்க போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பாரதி என்னை செல்போனில் அழைத்து போலீஸ் நிலையத்தில் பத்திரிகையாளர்கள் இருக்கிறார்கள். இதனால் என்னுடன் காரில் வா என்று அழைத்து சென்று எனது கணவரையும் அழைத்து வந்து சமாதனமாக போகவும். புகாரை திரும்ப பெற்று நல்லபடியாக வாழுங்கள் என்று சப்- இன்ஸ்பெக்டர் பாரதி வற்புறுத்தினார்” என்று தெரிவித்துள்ளார்.
“கணவரும் நல்லபடியாகச் சேர்ந்து வாழ்வதாக எழுதி கொடுத்தார். இந்த நிலையில் தொடர்ந்து வசந்தராஜா எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்” என்று குற்றம்சாட்டிய நடிகை ராதா, போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் பாரதி, இளம்பருதி ஆகியோர் எனது ஆட்கள்தான். நீ என்ன புகார் கொடுத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. போலீசில் எழுதி தந்ததை எல்லாம் அழித்துவிட்டேன் என வசந்தராஜா கூறினார்” என்றும் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இது பற்றி தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக கேட்ட போது வசந்தராஜா எழுதி கொடுத்த மன்னிப்பு கடிதம் அதில் இல்லை எனவும், வசந்தராஜாவுக்கு ஆதரவாகவும் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள் இளம்பருதி, பாரதி ஆகியோர் மீதும் தனக்கு கொலை மிரட்டல் விடுத்த வசந்தராஜா மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.







