பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தாராபுரம் தொகுதியில் வெற்றி பெற்றால் ஈரோடு-பழனி இடையிலான ரயில்பாதை அமைக்கப்பட உள்ளதாக நடிகை கவுதமி வாக்குறுதி அளித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநிலத் தலைவரும் தொகுதியின் வேட்பாளருமான எல்.முருகனுக்கு ஆதரவாக அவர் பரப்புரையில் ஈடுபட்டார். பரப்புரையின் போது கௌதமியை காண வந்திருந்த ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
பின்னர் பேசிய கவுதமி, தாராபுரம் தொகுதியில் மாணவ மாணவிகளுக்கு அரசு கலைக் கல்லூரி, மற்றும் மருத்துவ கல்லூரி உள்ளிட்ட உயர்கல்வி வாய்ப்புகளை எல்.முருகன் ஏற்படுத்திக் கொடுப்பார் என்று கூறினார். பிரதமர் நரேந்திர மோடியின் பாசத்திற்குரியவராக இருக்கும் முருகன் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவார் என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.







