தமிழ்நாட்டின் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் பெறுப்பேற்க வேண்டும் என்று சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று தீச்சட்டி எடுக்க உள்ளதாக நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மூங்கில்ஊரணி அருகே கீழ கொம்புக்காரனேந்தலில் உள்ள கந்தசாமி முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழா மற்றும் பால்குட விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து சாமிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டனர்.
நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அன்னதானத்தை துவக்கி வைத்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அதிமுகவில் தற்போது நடப்பது அங்காளி பங்காளி சண்டை. இது விரைவில் முடிவுக்கு வரும். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் இன்றைக்கு அடித்துக் கொள்வோம், நாளைக்கு கூடிக் கொள்வோம் என்பதை போன்று விரைவில் அனைவரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள்.
தற்போது உள்ள ஆட்சியில் மின்சார கட்டணம் வீட்டு வரி ஆகியவை உயர்த்தப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சி அமைந்திருந்தால் இந்த கட்டண உயர்வுகள் இருந்திருக்காது. எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அவர் , அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கும், மீண்டும் அடுத்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வர வேண்டும் என்றும் இன்று சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று தீச்சட்டி எடுக்க உள்ளேன்.
இவ்வாறு நடிகர் கஞ்சா கருப்பு கூறினார்.
- பி.ஜேம்ஸ் லிசா








