பராமரிப்பு பணிகள் மற்றும் மழைக்காலங்களில் ஏற்படும் மின்விபத்துக்களை தவிர்க்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மின்வாரிய பொறியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.
மழைக்காலங்கள் மற்றும் பராமரிப்பு பணிகளின் போது மின்சார விபத்து ஏற்படுகிறது. குறிப்பாக மழைக்காலங்களில் மின்கம்பிகள் அறுந்துவிழுவது, மின்கம்பிகளில் மரங்கள் விழுவது போன்ற காரணங்களால் மின்விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி முதல் மார்ச் வரை மாநிலம் முழுவதும் 97 மின் விபத்துகள் பதிவாகியுள்ளது. இதையடுத்து மின்விபத்துகளை தவிர்க்கக் கோரி அனைத்து மின்வாரிய பொறியாளர்கள், ஊழியர்களுக்கு மின்சார வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில்,
அந்தந்த பகுதிகளில் உள்ள பழுதடைந்த மின்கம்பிகள், வயர்கள், ட்ரான்ஸ்பார்மர்கள், மின்கம்பங்களை உடனடியாக மாற்றிட வேண்டும். மின்கம்பிகள் செல்லும் பகுதிகளில் அதிகளவில் மரம் வளர்ந்திருந்தாலோ அல்லது முறிந்து விழும் நிலையில் இருந்தாலோ அந்த மரங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.
மின்சார சீரமைப்பு பணிகளின் போது ஊழியர்கள் பாதுகாப்பு ஷூ, ஹெல்மெட் உள்ளிட்ட உபகரணங்களை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். சட்டவிரோதமாக மின் திருட்டில் பெரும்பாலான மின் விபத்துகள் ஏற்படுவதால், அதில் யாரேனும் ஈடுபட்டால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களை எச்சரிக்க வேண்டும்.
சட்டவிரோத மின் திருட்டில் ஈடுபடுவோர் மீது காவல்துறையில் புகாரளிப்பதை மின்வாரிய அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.