பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவர், தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே பாக் ஜலசந்தியை நீந்தி சாதனை படைத்துள்ளார்.
பெங்களூரைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனை 37 வயதான சுஜேத்தா, தனுஷ்கோடியிலிருந்து இலங்கையிலுள்ள தலைமன்னார் சென்று அங்கிருந்து மீண்டும் தனுஷ்கோடிக்கு வரையிலும் உள்ள பாக் ஜலசந்தி கடற்பரப்பினை இருபுறமாக நீந்தி சாதனை படைப்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை, இலங்கை தூதரகம் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சகத்திற்கு அனுமதி கோரியிருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையடுத்து இந்திய – இலங்கை இரு நாட்டு அனுமதியும் கிடைத்த நிலையில் தனுஷ்கோடி அரிச்சல்முனையிலிருந்து நீந்தத் துவங்கி இலங்கையில் உள்ள தலைமன்னாரை அடைந்தார். தொடர்ந்து அங்கிருந்து மறுபுறமாகத் தனுஷ்கோடிக்கு நீச்சல் அடித்துக் கொண்டு சர்வதேச கடற்பரப்பைத் தாண்டி வரும்போது ஜெல்லி மீன்கள் கடித்ததால் பாதிக்கப்பட்டுத் தொடர்ந்து நீந்த முடியாமல் நீச்சலை முடித்தார்.
தொடர்ந்து 17 மணிநேரம் 34 நிமிடங்கள் 42 கிலோ மீட்டர் தூரம் வரை நீந்தி உள்ளார். இதன் மூலம் தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னாருக்கு முதன்முதலாக நீந்திச் சென்றவர் என்ற சாதனையும், பாக் ஜலசந்தியை நீந்திக் கடந்த நான்காவது பெண் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
இது குறித்து சுஜேத்தா கூறுகையில், “ஜெல்லி மீன் கடித்ததால் என்னால் திட்டமிட்ட முழுமையான இலக்கை அடைய முடியவில்லை. ஆயினும் பாக் ஜலசந்தி கடற்பகுதியை ஒரு புறமாகக் கடந்ததில் மகிழ்ச்சியாக உள்ளேன். மீண்டும் இரு நாட்டு அனுமதியையும் பெற்று தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னார் சென்று மீண்டும் தனுஷ்கோடிக்கு நீந்தி வருவதற்கு முயற்சி செய்வேன். அதிகாரிகள் மறுமுறை மீனவர்கள் கடலுக்குச் செல்லாத நாட்களில் நீந்துவதற்கு அனுமதி தரவேண்டும்”, என்றார்.