உத்தரபிரதேசம் மாவ் பகுதியைச் சேர்ந்த நபர் தனது மனைவியுடன் சண்டையிட்டு ஒரு மாதமாக 80 அடி உயரமுள்ள பனைமரத்தில் வசித்து வருகிறார்.
உத்தரபிரதேசம் மாநிலம் மாவ் மாவட்டம் கோபகஞ்ச் பகுதியை சேர்ந்தவர் ராம் ப்ரவேஷ். 42 வயதான ராம் ப்ரவேஷுக்கும் அவரது மனைவிக்கும் கடந்த 6 மாதங்களாக சண்டை நடந்து வந்துள்ளது. இதனால் மன வருத்தம் அடைந்த ராம் ப்ரவேஷ் ஒரு மாத காலமாக அருகில் உள்ள 80 அடி உயரமுள்ள பனை மரத்தில் வசித்து வருகிறார். அவரது குடும்பத்தினர் உணவு மற்றும் தண்ணீரை கயிறு மூலம் மரத்தின் மேலே அனுப்பி வந்துள்ளனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது, இரவு நேரம் மட்டும் கழிவறை செல்ல ராம் ப்ரவேஷ் கீழ இறங்குவதாகவும், பல முறை ராம் ப்ரவேஷ்யை கீழ இறங்கக் கோரியும் இறங்காததால் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததாக கூறினர். தகவல் அறிந்து வந்த போலீசார் அந்த நபரை கீழே இறங்க கூறியும் அவர் கீழே இறங்காததால் வீடியோ மட்டும் எடுத்து சென்றுள்ளனர்.
கிராம தலைவர் தீபக் குமார், “உயரமான பனைமரத்தின் மேலே அமர்ந்திருப்பதால் அருகில் உள்ள வீடுகளில் வாழும் மக்கள் தங்களின் செயல்களை கவனிப்பதாக குற்றம்சாட்டினர். இது குறித்து கிராமத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் புகார் தெரிவித்ததால் காவல் நிலையத்திற்க்கு தகவல் தெரிவித்தோம். ஆனால் போலீசார் வீடியோ மட்டும் எடுத்து சென்றதாக குற்றம் சாட்டினார். ராம் ப்ரவேஷ்யை காண ஏராளமான மக்கள் வருவதாக ராம் ப்ரவேஷின் தந்தை ஸ்ரீகிஷுன் கூறியுள்ளார்.







