தருமபுரி பேருந்து நிலையத்தில், பெண் குழந்தையை பேருந்தில் விட்டுச் சென்ற பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தில், தேன்கனிகோட்டையில் இருந்து தருமபுரிக்கு வந்த அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிசெல்ல தயாராக இருந்தது. அப்போது பேருந்து இருக்கையில் ஒரு குழந்தை அழுது கொண்டிருந்தது. சத்தம் கேட்டு குழந்தையின் பெற்றோரை தேடினர். குழந்தையை தேடி யாரும் வராததால் அங்கிருந்த பொதுமக்கள் குழந்தையை மீட்டு தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் உள்ள காவல் உதவி மையத்தில் ஒப்படைத்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் தருமபுரி காவல் ஆய்வாளர் நவாஸ் உத்தரவின் பேரில் பேருந்து நிலையம் முழுவதும் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் குழந்தையை விட்டுச் சென்றவர்களைத் தேடி வந்தனர். கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது பச்சை நிற சுடிதார் அணிந்து வந்த ஒரு இளம் பெண் சுமார் 2 வயது மதிக்கத்தக்க பெண்குழந்தையுடன் முன்பக்கமாக பேருந்தில் ஏறி பின்னர் குழந்தையை இருக்கையில் விட்டு விட்டு பின்பக்க படி வழியாக இறங்கி சென்றது தெரிய வந்தது.
இந்நிலையில் பெற்றோரை காணமால் தொடர்ந்து அழுது கொண்டிருந்த குழந்தைக்கு பேருந்து நிலையத்தில் கடை வைத்திருக்கும் பெண்கள் குழந்தைக்கு உடைமாற்றி பால் மற்றும் உணவு அளித்து தூங்க வைத்தனர். இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் உத்தரவின் பேரில் குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்து தொப்பூர் அருகே உள்ள தமிழக அரசின் குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் ஒப்படைத்தனர். தற்பொழுது அந்த பெண் குழந்தை பராமரிக்கப்பட்டு வருகிறது.
அதே சமயத்தில் இந்த பெண் குழந்தை கடத்தப்பட்ட குழந்தையா, குடும்ப தகராரு காரணமாக தாயே குழந்தையை பேருந்து நிலையத்தில் விட்டு சென்றாரா, இந்த குழந்தைக்கு உண்மையான பெற்றோர் யார் என கண்டறியும் பணியிலும் மற்றும் அந்த மர்ம பெண்ணையும் போலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பேருந்து நிலையத்தில் பேருந்தில் பெண் குழந்தை மீட்கப்பட்ட சம்பவம் பயணிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.