சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு எதிராக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பான மனுவுக்கு ஜூலை 7 ஆம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2021 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட பழனிசாமியின் வேட்புமனு மற்றும் பிரமாண பத்திரத்தில் சொத்து விவரம் உட்பட பல்வேறு முக்கிய தகவல்களை தவறாக தெரிவித்துள்ளதால் அவர் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி தேனி உத்தமபாளையத்தைச் சேர்ந்த மிலானி என்பவர் சேலம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனை விசாரித்த சேலம் நீதிமன்றம், இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி, முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யும்படியும், இதுகுறித்து மே 26ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும், சேலம் குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரியும், உத்தரவை ரத்து செய்யக் கோரியும் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கு குறித்து காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாமென காவல்துறைக்கு அறிவுறுத்தியது. இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறி, சேலத்தில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் எடப்பாடி பழனிசாமியின் கணக்கு குறித்த விவரங்களை சேலம் மத்திய குற்றப் பிரிவு ஆய்வாளர் புஷ்பராணி மற்றும் உதவி ஆய்வாளர் குணசேகர் ஆகியோர் கேட்டு பெற்றுள்ளதாக கூறி, அவர்கள் இருவர் மீதும் எடப்பாடி பழனிசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.
சேலம் மத்திய குற்றப்பரிப்பு போலீசாருக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி பதிவு செய்துள்ள இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், இருண்டு அதிகாரிகளும் ஜூலை 7ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா