கூடுதலாகக் கடன் வசூல் செய்த தனியார் வங்கியை, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு ரூ.1.10 லட்சம் இழப்பீடு வழங்கத் திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைத்தீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் கூத்தா நல்லூர் பகுதியில் சேர்ந்த பன்னியர் செல்வம் மனைவி சுசீலா கடந்த 2019 மார்ச் மாதம், திருவாரூரில் உள்ள சிஏ மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருசக்கர வாகனத்தை இண்டஸ் வங்கிக் கடன் உதவியுடன் வாங்கி உள்ளார். இந்நிலையில் பெற்ற கடன் தொகையை சுசீலா, வங்கி விதி முறைகளின்படி மாதத்தவனையாக செலுத்தி வந்துள்ளார். கடன் தொகையை சுசீலா முழுமையாகக் கட்டி முடித்த பின்னரும் ரூ.14,613 கட்ட வேண்டும் என வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வங்கியில் விசாரித்த போது கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் முதல் 2020 ஜூலை மாதம் வரை மாதத் தவணையில் கூடுதலாகப் பணம் பிடித்தும் செய்யப்பட்டதும் இதனால் ரூ.14,613 கூடுதலாகக் கட்டுபடி வங்கி கூறி வந்ததும் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் சுசீலா வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கின் இறுதி விசாரணையை விசாரித்த ஆணையத் தலைவர் சக்கரவர்த்தி, தவறான தகவல்கள் மூலம் கூடுதல் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. எனவே, கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகையை 9% வட்டி உடன் புகார்தாரருக்கு அளிக்க வேண்டும். சேவை குறைபாடு மற்றும் புகார்தாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் ஆகியவற்றுக்கு இழப்பீடாக ரூ.1 லட்சம் வழங்க உத்தரவிட்டார்.
அண்மைச் செய்தி: ‘புதிய ஸ்மார்ட்போன் வாங்கும் முன் கவனத்தில் கொள்ள வேண்டியவை என்ன?’

இதேபோன்று கூத்தா நல்லூர் பகுதியைச் சேர்ந்த இக்பால் தீன் மகன் முகமது உசேன் இவர் கட்டுமான ஒப்பந்ததாரர் கௌதமன் என்பவரிடம் கழிவறை கட்டும் கட்டித் தரும்படி ரூ.15 ஆயிரத்தைக் கடந்த 2019 டிசம்பர் மாதம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஆனால், கௌதமன் கூறியபடி கழிவறையைக் கட்டித் தரவில்லை. இது தொடர்பாக வழக்கறிஞர் மூலம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியும் அதைக் கௌதமன் பெற்றுக் கொள்ளாமல் திருப்பி அனுப்பியுள்ளார். இதையடுத்து கௌதமன் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த சக்கரவர்த்தி, ஒப்பந்தம் போட்டபடி கழிவறைப் பணியைக் கெளதமன் செய்யவில்லை என்பது உறுதியாகிறது. எனவே புகார்தாரருக்கு ரூ.15 ஆயிரத்தை, 9 சதவீத வட்டியுடன் திருப்பி அளிக்க வேண்டும். மேலும் சேவை குறைபாடு, மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ. 50 ஆயிரமும், வழக்கு செலவுத் தொகையாக ரூ.5 ஆயிரமும் புகார்தாரர் முகமது உசேனுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.







