துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் தனது தம்பியை 17 மணி நேரமாக காயங்கள் ஏற்படாதவாறு தலையில் கை வைத்து காப்பாற்றிய சிறுமியின் புகைப்படம் இணையத்தில் அனைவராலும் வெகுவாக பகிரப்பட்டு வருகிறது.
துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 3 நாட்களாக அடுத்தடுத்து ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் அங்குள்ள நகரங்கள் உருக்குலைந்தன. மேலும், துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை 15,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 5,000-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து சேதமடைந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பேர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட தெற்கு துருக்கியில் 3 மாதங்கள் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கி அதிபர் தய்யிப் எர்துகான் மீட்பு பணி மற்றும் நிவாரணக் குழுக்கள் வருவதற்கு தாமதமானது தான் அதிக உயிரிழப்பிற்கு காரணம் எனக் கூறியுள்ளார். துருக்கியில் ஏற்ப்பட்டுள்ள கடுமையான பனிப்பொழிவால் மீட்பு பணிகள் தாமதமாவதாகவும் சொல்லப்படுகிறது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மற்றும் சிரியாவுக்கு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டிய நிலையில், நிவாரணப் பொருட்கள் மற்றும் மருத்துவக் குழுவினருடன் சென்ற இந்திய விமானப்படைக்கு சொந்தமான 2 விமானங்கள் துருக்கி சென்றடைந்தன. இந்த விமானங்களில், உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் அவசரகால மருந்து பொருட்கள் ஆகியவை அனுப்பப்பட்டன.
இந்த நிலையில் சிரியாவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தில் 7வயது சிறுமியும் அவளது தம்பியும் கட்டட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். சிறுமியின் மேல் இடிந்த கட்டடங்களின் கற்களும், சுவர்களும் சரிந்து விழுந்த நிலையில் அவர் தனது ஒரு கையால் தனது தம்பியின் தலையில் கை வைத்து அவனுக்கு காயங்கள் ஏற்படாதாவாறு பார்த்துக் கொண்டார். மேலும் இந்த சம்பவம் கிட்டத்தட்ட 17 மணி நேரம் தொடர்ந்தது.
இதனையடுத்து மீட்புக் குழுக்கள் அந்த இடத்தை அடைந்ததும் அவர்கள் மீட்டுள்ளனர். தம்பியை 17 மணி நேரம் பாதுகாத்த 7 வயது சிறுமியின் படத்தை ஐநா வுக்கான பிரதிநிதிக்குழுவின் முஹம்மது சஃபா பதிவிட்டுள்ளார். இந்த படம் இணையத்தில் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.
– யாழன்







