புதுச்சேரியில் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் நண்பரை அடித்துக் கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி அரும்பார்த்தபுரம் பகுதியை சேர்ந்த பூபதி, பூ விற்பனை கடை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் மனவெளி தண்டுகரை பகுதியில் உள்ள காலி மனையில் தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். சம்பவ இடத்திற்கு வந்த வில்லியனூர் காவல் நிலைய போலிசார் பூபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், சில அதிர்ச்சித் தகவல்கள் தெரிய வந்தன. அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பரான பிரபு என்பவருடன் பூபதி மது அருந்தியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த பிரபு மரக்கட்டையால் பூபதியின் தலையில் அடித்துக் கொலை செய்துள்ளார். இதையடுத்து பிரபுவை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.








