காதலனுடன் சென்ற மகள்; விரக்தியில் உயிரை மாய்த்துக்கொண்ட பெற்றோர்

சிதம்பரம் அருகே நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில் மகள் காதலனுடன் சென்றதால் மனமுடைந்த தாய், தந்தை விஷம் அருந்தி உயிரை மாய்த்துக்கொண்ட  சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரம் அருகே வேலங்கிபட்டு பகுதியை…

சிதம்பரம் அருகே நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில் மகள் காதலனுடன் சென்றதால் மனமுடைந்த தாய், தந்தை விஷம் அருந்தி உயிரை மாய்த்துக்கொண்ட  சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிதம்பரம் அருகே வேலங்கிபட்டு பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவருக்கு முதல் திருமணத்தில் இரண்டு மகன், ஒரு மகள் இருந்த நிலையில் முதல் மனைவி இறந்து விடவே இரண்டாவதாக சுமதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 19 வயதான சுசி என்கிற மகள் உள்ளார். இவர் அருகே உள்ள ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவருக்கு நாளை மறுநாள் நிச்சயதார்த்தம் செய்ய இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று கல்லூரிக்கு சென்ற மகள் வீட்டுக்கு வராததால் யாருடனாவது காதல் ஏற்பட்டு சென்று இருக்கலாம் என சந்தேகம் அடைந்த சுந்தரமூர்த்தி, சுமதி, இருவரும் வீட்டில் பின்புறம் உள்ள வயலுக்கு சென்றவர்கள் நிலத்திற்கு பயன்படுத்தப்படும் களைக்கொல்லி மருந்தை குடித்துஉயிரை மாய்த்துக்கொண்டனர்.

வயலுக்கு சென்ற அக்கம் பக்கத்தினர் இருவரும் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இந்த சம்பவம் குறித்து புதுச்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் உடலையும் கைப்பற்றி பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்தும், காணாமல் போன மகளை குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நேரத்தில் கணவன் மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.