வந்தவாசி அடுத்த மேல்மா கூட்ரோடு அருகே திருமண வரவேற்பு நிகழ்வுக்கு சென்று வந்த தனியார் பேருந்து திடீரென தீ பிடித்து எரிந்தது. இதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் தாலுக்கா பெரியகாயம் பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் செங்கோட்டை. இவரது மகன் வெங்கடேசனுக்கும், காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கையை சேர்ந்த கோபி மகள் வேதவலிக்கும் அச்சரப்பாக்கத்தில்நேற்று இரவு இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காஞ்சிபுரத்திலிருந்து வந்த மணமகளின் உறவினர்கள் நண்பர்கள் 40 பேர் தனியார் பேருந்தில் அச்சரப்பாக்கம் சென்று விட்டு மீண்டும் ஊர் திரும்பி கொண்டிருந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மேல்மா கூட்ரோடு அருகே செல்லும் போது பேருந்தின் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதனால் டிரைவர் பஸ்சை ஓரமாக சாமர்த்தியமாக நிறுத்தி உள்ளார். ஆனால் பயணிகள் பஸ்ஸிலிருந்து இறங்க முடியவில்லை. பஸ் முழுமையான குளிர்சாதன வசதி கொண்டதாகவும் மூடப்பட்ட கண்ணாடிகளைக் கொண்டதாகவும் இருந்து உள்ளது. பயணிகள் செய்வதறியாது தவித்தனர்.
அப்போது சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த லாரியில் இருந்த டிரைவர் உடனடியாக லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு லாரியில் இருந்து இரும்பு ராடால் பஸ்ஸின் கண்ணாடிகளை உடைத்து பயணிகளை வெளியேற வழி ஏற்படுத்தினார் உடனடியாக பயணிகள் அனைவரும் வேகமாக இறங்கினர். அப்போது பஸ் முழுமையாக தீப்பிடித்தது.
இந்த சம்பவத்தில் 4 பேர் காயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். இதுகுறித்து வந்தவாசி வடக்கு காவல் நிலைய சப்ன்ஸ்பெக்டர் வரதராஜ் விசாரணை செய்து வருகிறார்.