அரசின் அனுமதியின்றி தன்னிச்சையாக விடுமுறை அறிவித்தது ஏன்? என்று விளக்கம் கேட்டு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிக் பள்ளி மீதான தாக்குதலைக் கண்டித்து நேற்று மாநிலம் முழுவதும் 987 தனியார் பள்ளிகள் நேற்று இயங்கவில்லை.
இந்நிலையில், அரசின் எச்சரிக்கையை மீறி, விடுமுறை அறிவித்ததற்கு உரிய விளக்கம் தர வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியது.
பள்ளிகளின் விளக்கத்தைப் பொருத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரிலுள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +2 மாணவி ஸ்ரீமதி உயிரிழந்தார். இவரது உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், நீதி விசாரணை தேவை என்றும் கோரி இளைஞர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மிகப் பெரிய வன்முறை வெடித்தது. இதில் பலர் காயமடைந்தனர். பள்ளியை போராட்டக்காரர்கள் சூறையாடினர். அதிரடி படையினர் கலவரத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
தனியார் பள்ளி சூறையாடப்பட்டதற்கு தனியார் பள்ளிகள் சங்கம் கடும் கண்டனம் பதிவு செய்தது.
இதனிடையே, தனியார் பள்ளிகள் இன்று முதல் வழக்கம் போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.








