தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பால் அறிவித்த ஸ்ட்ரைக்கில் 987 பள்ளிகள் மட்டுமே பங்கேற்றதாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற வன்முறையைக் கண்டித்து இன்று முதல் தனியார் பள்ளிகள் எதுவும் இயங்காது என்று தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பு அறிவித்திருந்தது. ஆனால், அரசிடம் அனுமதி பெறாமல் பள்ளிகளை மூடினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், இன்றைய ஸ்ட்ரைக்கில் பங்கேற்ற பள்ளிகள் எத்தனை? பங்கேற்காத பள்ளிகள் எத்தனை? என்ற விவரத்தை மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மொத்தம் உள்ள 11,335 தனியார் பள்ளிகளில் 10,348 பள்ளிகள் அதாவது 91% பள்ளிகள் வழக்கம் போல் இயங்கியதாகவும், 987 பள்ளிகள் (9% ) மட்டும் இயங்கவில்லை என்றும் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
அண்மைச் செய்தி: ‘குடியரசுத் தலைவர் தேர்தல்; வாக்களித்த அமைச்சர் நாசர், ஓபிஎஸ்’
11 மாவட்டங்களில் 100% தனியார் பள்ளிகள் செயல்பட்டுவருவதாகவும், வன்முறை நிகழ்ந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 92% பள்ளிகள் இயங்கிவருவதாகவும், மிகக்குறைந்த பட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 32% பள்ளிகள் மட்டுமே இயங்கியதாகவும் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.








