தமிழ்நாட்டில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்புவோர் மீது 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.
வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் குறித்து நியூஸ் 7 தமிழ் குற்றப்பிரிவு தலைமை செய்தியாளர் சுப்பிரமணியன், டிஜிபி சைலேந்திரபாபு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டார். அப்போது பேசிய டிஜிபி சைலேந்திரபாபு, வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை என எச்சரித்தார்.
வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பரவும் வீடியோ போலியானது என்றும், வதந்தி பரப்பிய 4 பேர் மீது இதுவரை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் வடமாநில தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றும் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.
முன்னதாக டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், புலம்பெயர்ந்த வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக உண்மைக்கு புறம்பான பொய்யான தகவல் இணையதளத்திலும், சமூக ஊடகங்களிலும் விஷமிகள் சிலரால் பரப்பப்பட்டுள்ளது. அப்படி பொய் செய்தி பரப்பியவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
இதுதொடர்பாக திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 153 A, 153 (i)(b) கீழ் தெய்னிக் பாஸ்கர் பத்திரிக்கையின் ஆசிரியர் மீது ஒரு வழக்கும், திருப்பூர் மாவட்டம் சைபர் காவல்நிலையத்தில் இந்திய தண்டனைச்சட்டப்பிரிவுகள் 153 பி, 505 (ii)(b) மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 56 டி கீழ் தன்வீர் போஸ்ட் என்ற பத்திரிக்கையின் உரிமையாளர் முகமது தன்வீர் என்பர் மீது ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, தூத்துக்குடி மாவட்டம் செண்ட்ரல் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153, 153 A, 504, 505(i)(b), 505 (i)(c), 505(2) கீழ் பிரசாந்த் உமராவ் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள இவர்களை கைது செய்ய தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவின் பெயரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வாழும் புலம்பெயர்ந்த வட மாநில தொழிலாளர்கள் எவ்வித அச்சமும் இன்றி முழு பாதுகாப்புடன் அமைதியாக வசித்து வருகிறார்கள். அமைதியை சீர்குலைத்து பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பொய் செய்திகளை பரப்புவேர் பற்றிய விவரங்கள் காவல்துறையினராலி சேகரிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.









