இலங்கையில் இருந்து 2 குடும்பத்தை சேர்ந்த 4 குழந்தைகள் உட்பட 7 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தனுஷ்கோடி இலங்கைக்கு அருகே உள்ளதால் இலங்கையில் போர் நடந்த போது இலங்கை தமிழர்கள் தங்களது உயிர்களை காப்பாற்றி கொள்ள அகதிகளாக தனுஷ்கோடி வழியாக தமிழகத்திற்கு வந்து இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் தங்கியுள்ளனர்.
அதேபோல் தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் உணவு பஞ்சம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் இலங்கை தமிழர்கள் இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லையில் உள்ள தீவிர கண்காணிப்பையும் மீறி பைபர் படகுகளில் தனுஷ்கோடிக்கு அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர். சில நேரங்களில் இங்கு அகதிகளாக வருபவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, தடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று வவுனியா பகுதியை சேர்ந்த 2 குடும்பத்தை சேர்ந்த 3 பெரியவர்கள் 4 குழந்தைகள் உட்பட 7 பேர் அகதிகளாக ராமேஸ்வரம் வந்துள்ளனர். அவர்களை மீட்ட மரைன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்கு பின்னர் அனைவரையும் மண்டபம் அகதிகள் முகாமிற்கு கொண்டு செல்வார்கள்.
இலங்கையில் ஏற்பட்டு பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் 22ம் தேதியிலிருந்து இதுவரை 24 குடும்பத்தை சேர்ந்த 90 பேர் அகதிகளாக ராமேஸ்வரம் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.








