மாமல்லபுரத்தில் வன உயிரின சட்டத்தை மீறி பச்சைக் கிளிகளை மர கூண்டுகளில் அடைத்து சுற்றுலாப் பயணிகளிடம் கிளி ஜோசிய பார்த்துவந்த 7 பேரை போலீசார் கைது செய்து அபராதம் விதித்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் கடற்கரைச் சாலை, அர்ச்சுணன் தபசு, ஐந்துரதம் மற்றும் கோவளம் கடற்கரை பகுதிகளில் காடுகள், வயல்வெளிகள், தோட்டங்களிலிருந்து பிடித்து வரப்பட்ட பச்சைக் கிளிகளைப் பறந்து செல்லாமல் இருக்க இறக்கைகளை வெட்டி மரப்பெட்டி கூண்டுகளில் அடைத்து கிளி ஜோசியக்காரர்கள் துன்புறுத்துவதாகச் செங்கல்பட்டு மாவட்ட வனத்துறைக்குப் புகார்கள் சென்றுள்ளது. இதையடுத்து திருப்போரூர் வனச்சரக அலுவலர் ப.கல்யாண் தலைமையில் வனத்துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் மாமல்லபுரத்தில் திடீரென ஆய்வு செய்துள்ளனர். அப்போது, கடற்கரை பகுதி, அர்ச்சுணன் தபசு, வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட பகுதிகளில் சாலை ஓரம் அமர்ந்து பச்சைக் கிளிகளைக் கூண்டில் அடைத்து சுற்றுலாப் பயணிகளிடம் கிளி ஜோசியத்தில் ஈடுபட்டு வந்த கிளி ஜோசிக்காரர்களை கண்டுபிடித்துள்ளனர்.
அப்போது, வனத்துறை அதிகாரிகளைப் பார்த்ததும், அவர்கள் தப்பி கிளிக் கூண்டுடன் ஓட முயன்றுள்ளனர். அப்போது, அவர்களை மடக்கிப் பிடித்த திருப்போரூர் வனத்துறையினர், உடனடியாக கைது செய்துள்ளனர். அதனைத்தொடர்ந்து திருப்போரூர் வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட கிளி ஜோசியக்காரர்களான சுப்பிரமணியன்(வயது60), தங்கமாரி(வயது50), வள்ளி நாயகம்(வயது29), மாரியப்பன்(வயது43), முப்புடாதி(வயது36), குமார்(40), பரமசிவன்(வயது55) ஆகிய 7 பேர் மீதும் வனத்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கிளி ஜோசியக்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கூண்டுக் கிளிகளை வனத்துறை அதிகாரிகள் இள்ளலூர் காப்புக் காட்டில் கொண்டு போய் விட்டனர்.








