தாய்லாந்தில் மேம்பாலம் இடிந்த விழுந்து 7 பேர் உயிரிழப்பு!

தாய்லாந்தில் மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்து தலைநகர் பாங்காக் நெடுஞ்சாலை மிகவும் பரபரப்பான சாலை ஆகும். இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க அங்கு புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேம்பாலம் கட்டுமானப் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்போது திடீரென பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது.

இந்த விபத்தில் என்ஜினீயர் உள்பட 7 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். மேலும் 24 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப்படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவத்தால் நெடுஞ்சாலை மூடப்பட்டு சில மணி நேரம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனை அடைத்து இடிபாடுகள் அகற்றப்பட்ட பிறகு அங்கு மீண்டும் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.