மதுரையில் instagram மூலம் 16 வயது சிறுமியிடம் 60 சவரன் நகையை மிரட்டி வாங்கியதாக அவனியாபுரம் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனி பகுதியைச் சேர்ந்தவர்கள் சுந்தரம் – மீனாட்சி தம்பதி. இத்தம்பதியின் 16 வயது சிறுமி கடந்த ஆறு மாதங்களாக இன்ஸ்டாகிராம் மூலம் மதுரை எம்.கே.புரம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (22) என்பவருடன் பழகி வந்துள்ளார். இந்த நிலையில் இருவரும் நேரில் சந்தித்து காதல் ஜோடிகள் போல் சுற்றி வந்த நிலையில், இதனைப் பயன்படுத்தி சதீஷ்குமார் 16 வயது சிறுமியிடமிருந்து தங்க நகையை வாங்கி விற்று உல்லாசமாக இருந்துள்ளார்.
இந்நிலையில், சிறுமியின் பெற்றோர் பீரோவை திறந்து பார்த்தபோது உள்ளே வைக்கப்பட்டிருந்த நகைகள் மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து மகளிடம் விசாரணை மேற்கொண்டத்தில் சதீஷ்குமார் என்பவரிடம் நகையைக் கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அவனியாபுரம் காவல் நிலையத்தில் சதீஷ்குமார் என்பவர் எனது மகளுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 60 சவரன் நகையை மிரட்டி வாங்கியுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இதுகுறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-ம.பவித்ரா







