மக்களின் உணர்வுகளை மதிக்காமல் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியது
நியாயமற்றது. கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டண உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வந்திருப்பதாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்திருக்கிறது. மக்களால் தாங்க முடியாத அளவுக்கு மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது அனைத்து தரப்பினரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.
மின்கட்டண உயர்வு குறித்து தமிழகத்தில் 3 இடங்களில் மட்டும் தான் கருத்துக்கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அதில் பங்கேற்றவர்களில் பெரும்பான்மையினர் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என கருத்துத் தெரிவித்தனர். அதன் பிறகும் மின்கட்டணத்தை உயர்த்துவது நியாயமல்ல.
மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வரும் நிலையில், இந்தக் கட்டண உயர்வு தேவையற்றது. மக்களின் இந்த மனநிலையை உணர்ந்து மின் கட்டண உயர்வை தமிழ்நாடு மின்சார வாரியம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
-ம.பவித்ரா








