பலகோடி மதிப்புள்ள 2 வலம்புரி சங்குகளை பதுக்கி வைத்து பல கோடிக்கு விற்பனை செய்ய முயன்ற 6 பேரை வனத்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் ஏர்வாடி பகுதியில் அரியவகை வலம்புரி சங்குகளை வீட்டில் பதுக்கி வைத்து பல கோடிக்கு விற்பனை செய்ய முயற்சிப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. வனத்துறை அதிகாரிகள் களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட திருக்குறுங்குடி வனசரகம் ஏர்வாடியைச் சேர்ந்த சண்முகம் என்பவர் வீட்டில் சோதனை நடத்தினர்.
இதில் வீட்டில் மறைத்து வைத்திருந்த 2 அரியவகை வலம்புரிச் சங்குகளை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து சண்முகம், இவரது கூட்டாளிகளான சூரியன், பிரவீன், ராஜன், சரவணன், வீரபெருமாள், ஆறுமுகம் ஆகியோரை கைதுசெய்தனர். இவர்களிடமிருந்த 1.4 கிலோ மற்றும் 1.5 கிலோ எடையுள்ள 2 வலம்புரி சங்குகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கைப்பற்றப்பட்ட 2 வலம்புரி சங்குகள் அரியவகை சங்குகள் என்பதால் பல கோடிக்கு விற்பனை செய்ய முயற்சித்தது தெரியவந்தது. கைதான 6 பேரும் நாங்குனேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.








