அக்.12க்குள் 5 ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும்- மத்திய அமைச்சர்

இந்தியாவில் வரும் அக்டோபர் 12ம் தேதிக்குள் 5ஜி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.  இந்தியாவில் 5ஜி சேவை வழங்குவதற்கான அலைக்கற்றை ஏலம் கடந்த ஜூலை 26ம் தேதி இணையதளம் வாயிலாக…

இந்தியாவில் வரும் அக்டோபர் 12ம் தேதிக்குள் 5ஜி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். 

இந்தியாவில் 5ஜி சேவை வழங்குவதற்கான அலைக்கற்றை ஏலம் கடந்த ஜூலை 26ம் தேதி இணையதளம் வாயிலாக தொடங்கியது. 7 நாட்களாக 40 சுற்றுகளாக ஏலம் நடைபெற்று நிறைவடைந்தது. இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி குழுமத்தின் அதானி டேட்டா நெட்வர்க் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றன.

மொத்தம் ரூ.1.50 லட்சம் கோடிக்கு 5ஜி அலைக்கற்றை ஏலம் எடுக்கப்பட்டது. ஜியோ நிறுவனம் அதிகபட்சமாக ரூ.88 ஆயிரத்து 78 கோடிக்கும்,ஏர்டெல் நிறுவனம் ரூ.43 ஆயிரத்து 48 கோடிக்கும், வோடபோன்-ஐடியா நிறுவனம் ரூ.18 ஆயிரத்து 799 கோடிக்கும், அதானி நிறுவனம் ரூ.212 கோடிக்கும் ஏலம் எடுத்தன.

இந்த நிலையில் டெல்லியில் இன்று 5ஜி சேவை குறித்து பேசிய மத்தியஅமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், 5 ஜி சேவைகளை விரைவாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அதனை கருத்தில் கொண்டு தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் வேலை செய்து வருகின்றனர். வரும் அக்டோபர் 12ம் தேதிக்குள் 5ஜி சேவையை அறிமுகப்படுத்த திட்டமிடப்படுள்ளது. அதன் பிறகு நகரங்கள் மேலும் விரிவடையும் என்று நம்புகிறோம்.

அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் 5ஜி சேவை சென்றடைய வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு. அது மலிவு விலையில் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்யும். நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் தொழில்துறை கவனம் செலுத்துகிறது என கூறினார் .

சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி ஆற்றிய உரையில், டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள, 5ஜி தொழில்நுட்பம் அடிமட்ட அளவில் புரட்சியை ஏற்படுத்தும் என்று கூறியிருந்தார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.