மவுத் பிரெஷ்னர் சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சார்ந்த 5 பேர் உடல் நலம் பாதிப்பு!

மவுத் ஃப்ரெஷ்னர் பயன்படுத்திய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் ரத்த வாந்தி எடுத்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பொது மக்களிடையை அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.  ஹரியானா மாநிலத்தின்…

மவுத் ஃப்ரெஷ்னர் பயன்படுத்திய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் ரத்த வாந்தி எடுத்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பொது மக்களிடையை அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 

ஹரியானா மாநிலத்தின் குருகிராம் மாவட்டத்தில் செக்டர் 90 பகுதியில் லா ஃபாரஸ்டா கபே என்ற ஓட்டல் செயல்பட்டு வருகிறது.  இந்நிலையில்,  நேற்று அந்த ஓட்டலுக்கு அங்கித் குமார் என்பவர் தனது குடும்பத்தினர்,  நண்பர்களுடன் சென்று உணவருந்தி உள்ளனர். அதன் பின்,  அவர்கள் ஐஸ் கலந்த மவுத் ஃப்ரெஷ்னரை சாப்பிட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள் : மக்களவை தேர்தல் 2024 | நாளை வெளியாகிறது வேட்பாளர் இறுதி பட்டியல்!

இதையடுத்து, சிறிது நேரத்தில் அவர்களது நாக்குகளில் எரிச்சல் ஏற்பட்டது.  சிலருக்கு வாயில் புண் ஏற்பட்டு ரத்தம் வடியத் தொடங்கியது.  அங்கு சென்ற ஐவரில் ஒரு பெண் ரத்த வாந்தியும் எடுத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  இதையடுத்து அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  மருத்துவமனையில்  அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இதில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில்,  இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.  தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.  மவுத் ஃப்ரெஷ்னரில் ஏதேனும் ரசாயனம் கலந்துள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.  இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.