நாளை மறுநாள் மக்களவைத் தேர்தலின் 4ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், பரபரப்பாக நடைபெற்ற பிரசாரம் இன்று (மே 11) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.
நாடு முழுவதும் மக்களவைத்தேர்தல் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில், 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த ஏப். 19-ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல் ஏப். 26ம் தேதியும், 93 தொகுதிகளுக்கு மே 7-ம் தேதி 3-ம் கட்ட தேர்தலும் நடைபெற்றது.
இதனிடையே, 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் 96 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (மே 13) 4ம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. ஆந்திரா (25), பீகார் (5), ஜார்க்கண்ட் (4), மத்தியபிரதேசம் (8), மகாராஷ்டிரா (11), ஒடிசா (4), தெலுங்கானா (17), உத்தரபிரதேசம் (13), மேற்குவங்கம் (8) ஜம்மு-காஷ்மீர் (1) என மொத்தம் 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. மே 13-ம் தேதி தேர்தலையொட்டி காங்கிரஸ், பாஜக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, சிவசேனா உள்பட பல்வேறு கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டன.
இந்நிலையில், 4ம் கட்ட தேர்தல் பிரசாரம் இன்று (மே 11) மாலை 6 மணியுடன் நிறைவடைந்துள்ளது. தேர்தல் பிரசாரம் நிறைவடைந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இருந்து வெளிநபர்கள் உடனடியாக வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
4ம் கட்ட நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து ஆந்திரா, ஒடிசா சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது. அதன்படி, ஆந்திராவில் மொத்தமுள்ள 175 சட்டசபை தொகுதிகளுக்கும் நாளை மறுநாள் (மே 13) ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. அதே நாளில், ஒடிசாவில் மொத்தமுள்ள 147 சட்டசபை தொகுதிகளில் 28 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. சட்டசபை தேர்தலுக்கான பிரசாரமும் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.







