காவல் நிலையங்களில் குற்றவாளிகள் காவலர்களை தாக்கும் போது அதை எப்படி எதிர்கொள்வது என்பதற்கான பயிற்சி வழங்கப்படும் என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள தூய வளனார் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் அமைப்பு மற்றும் தமிழ்நாடு காவல் துறையின் சார்பில், “காவல் நிலைய மரணங்கள் தடுப்பு” என்கிற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் தமிழ்நாடு காவல் துறை தலைவர் சைலேந்திர பாபு தலைமையில் இன்று காலை துவங்கியது.
இந்த கருத்தரங்கத்தில் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன், திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். மேலும், ஓய்வு பெற்ற நீதிபதிகள், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
கருத்தரங்கிற்கு முன்னதாக தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், காவல் நிலைய மரணங்களை தடுப்பது தொடர்பாக ஒரு நாள் கருத்தரங்கம் இன்று நடந்து வருவதாகவும், திருச்சியில் 350 பேர் பயிற்சி எடுக்க உள்ளதாக கூறினார். மேலும், 919 காவல் நிலைய மரணங்கள் இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் நிகழ்ந்துள்ளதாக தெரிவித்த அவர், தமிழகத்தில் 10 ஆண்டுகளில் 84 காவல் நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளது தெரிவித்தார்.
அண்மைச் செய்தி: ‘தொடங்கியது குரூப் 2, 2ஏ தேர்வு’
தமிழகத்தில் சென்ற ஆண்டு 4 பேர் காவல் நிலைய மரணமடைந்துள்ளதாக தெரிவித்த அவர், காவல் நிலையங்களில் காவலர்கள் மீது தாக்குதல் நடத்தும்போது அவர்களை லத்தியால் தாக்காமல் எப்படி விலங்கு போடுவது என்பது குறித்த பயிற்சி தரப்பட உள்ளதாகவும், காவல் நிலையங்களில் குற்றவாளிகள் காவலர்களை தாக்கும் போது அதை எப்படி எதிர்கொள்வது என்பதற்கான பயிற்சிகளையும் வழங்குவதாகவும் தெரிவித்தார்.
மேலும், காவல் நிலையத்தில் காவலர்கள் தாக்கியதால் மட்டுமே குற்றவாளிகள் இறந்தார்கள் என்று சொல்லமுடியாது என தெரிவித்த அவர், உடல்நிலை சரியில்லாமல் கூட சிலர் இறந்து விடுகிறார்கள் என குறிப்பிட்டார். அதேபோல சிலர் உயிரிழப்பு கொள்வதாக தெரிவித்தார். காவலர்கள் குற்றவாளிகளை கண்ணியமாகவும் பாதுகாப்பாகவும் நடத்த வேண்டும் என்பதற்குத்தான் இந்த கருத்தரங்கம் நடத்தப்படுகிறது என தெரிவித்த டிஜிபி, லாக் அப் மரணமே இல்லை என்ற நிலையை உருவாக்குவதே இந்த இந்த பயிற்சியின் நோக்கம் என குறிப்பிட்டார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.







