34 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லை என சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று நிலைமையை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பூர்ணலிங்கம் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் இன்று ஆலோசனை மேற்கொண்டனர். இந்தக் கூட்டத்தில் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அரசு அலுவலர்கள் இல்லாத மருத்துவர்கள் 4 பேரும், மருத்துவக்கல்வி இயக்குனர் உள்ளிட்ட 9 பேரும் பங்கேற்றனர்.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், “தொற்று அதிகமுள்ள மாவட்டங்களில் என்ன மாதிரியான தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பது என்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டோம். தொற்று அதிகமுள்ள மாவட்டங்களில் மைக்ரோ ப்ளானை செயல்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.
34 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லை என்று தெரிவித்த சுகாதாரத் துறைச் செயலாளர், “நாளை முதல் 13ம் தேதி வரை 6.5 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வர உள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறப்பு எண்ணிக்கையைப் பொறுத்தவரை அரசு எதையும் மறைப்பதில்லை” என்றார்.
மேலும், கருப்பு பூஞ்சைக்கு வேறு சில மருந்துகளையும் மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. மருந்து இல்லை என்ற நிலை இல்லை, இன்சுலினையும் பயன்படுத்தலாம். ஸ்புட்னிக் தடுப்பூசியை வாங்கி பொதுமக்களுக்கு செலுத்துவது தொடர்பாக அரசிடம் விவாதித்து முடிவு எடுக்கப்படும்” என்று கூறினார்.







