மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் நினைவிடத்துக்கு தினமும் 30 ஆயிரம் ரசிகர்கள் வந்து அஞ்சலி செலுத்துவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கன்னட சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் புனித் ராஜ்குமார் (46). இவர் கடந்த மாதம் 29 ஆம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். இவர், மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் மகன். புனித்தின் மரணம், குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்திய திரை உலகினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் வெங்கைய்யா நாயுடு, கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள் உட்பட பலர் அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.
அவர் உடல், கன்டீரவா ஸ்டூடியோவுக்கு கொண்டு செல்லப்பட்டு முழு அரசு மரியாதை யுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தமிழ் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சூர்யா ஆகியோர் அவர் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் அவர் அடக்கம் செய்யப்பட்டுள்ள கன்டீரவா ஸ்டூடியோவுக்கு, அவர் நல்லடக்கம் செய்யப்பட்டதில் இருந்து தினமும் 30 ஆயிரம் ரசிகர்கள் அஞ்சலி செலுத்த வருகை தருவதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித் துள்ளார்.
அவர் கூறும்போது, ’புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தில், கர்நாடக ரிசர்வ் போலீஸ், பெங்களூரு நகர போலீசார் உட்பட சுமார் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர் மறைந்ததில் இருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ரசிகர்கள் வருகின்றனர். தினமும் 30 ஆயிரம் ரசிகர்கள் வந்து அஞ்சலி செலுத்துகின்றனர்’ என்றார்.









