சென்னையின் மையப்பகுதியான வடபழனியில் செயல்பட்டு வரும் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.30 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடபழனி மன்னார் முதலி தெருவில் சரவணன் என்பவருக்கு சொந்தமான ஓசோன் கேபிட்டல் என்ற தனியார் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகள் உள்பட பல்வேறு வணிக நிறுவனங்களில் வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளுக்கு கடன் வழங்கி வருகிறது.
இவ்வாறு கடன் கொடுத்து வாங்கும் பணத்தை நிதி நிறுவன அலுவலகத்துக்கு கொண்டு வரப்படுவது வழக்கமாக இருந்துவந்துள்ளது. இதனை அறிந்த மர்ம நபர்கள் 8 பேர், முகமூடி அணிந்து அந்த நிதி நிறுவனத்தில் இருந்த ஊழியர்களை கட்டிப்போட்டு அங்கிருந்த ரூ.30 லட்சத்தை கொள்ளை அடித்துச் சென்றனர்.
இதுதொடர்பாக விசாரணையைத் தொடங்கிய வடபழனி காவல் துறையினர் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஒருவரை கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் மேலும் 7 பேரை தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களைத் தேடுவதற்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கொள்ளையில் ஈடுபட்ட 7 பேரை தேடி ஆந்திரா, திருச்சி, ஆகிய இடங்களுக்கு தனிப்படை விரைந்துள்ளது.
பிடிபட்ட செய்யது ரியாஸ் இக்பால் என்பவரிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, சென்னையில் மிகவும் பரபரப்பான பகுதியான அரும்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியில் சமீபத்தில் 32 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். இந்நிலையில், மீண்டும் ஒரு கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.








