மதுரையில் கழிவுநீர் தொட்டிக்குள் விஷவாயு தாக்கி 3 பேர் பலியான விவகாரம் தொடர்பாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுரை மாநகராட்சி, நேரு நகர் பகுதியிலுள்ள கழிவுநீர் தொட்டியில் உள்ள மின் மோட்டார் பழுதடைந்துள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளிலும் கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டதையடுத்து, மின் மோட்டரின் பழுது நீக்க மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்கள் சிவகுமார், லட்சுமணன், சரவணன் ஆகியோர் நேற்றிரவு ஈடுபட்டுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது எதிர்பாராதவிதமாக விஷவாயு தாக்கியதில் மூவரும், அடுத்ததடுத்து மயங்கி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்துள்ளனர். இதனையடுத்து அங்கு வந்த தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறையினர் இணைந்து, மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். கழிவுநீர் தொட்டியில் விழுந்த லட்சுமணன், சிவகுமார் மற்றும் சரவணன் ஆகியோரின் உடல்களை தீயணைப்புவீரர்கள் போராடி மீட்டனர்.
இதனிடையே சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன், மாநகராட்சி துணை மேயர் நாகராஜன், மாநகர காவல்துறை துணை ஆணையர் தங்கத்துரை ஆகியோர் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். கழிவு நீர் தொட்டி பழுதுநீக்கும் பணிகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காததே உயிரிழப்புக்கு காரணம் என பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
இந்நிலையில், மாநகராட்சி ஒப்பந்த நிறுவன உரிமையாளர் விஜயானந்த் மற்றும் அந்த நிறுவனத்தை சேர்ந்த ரமேஷ், லோகநாதன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இரவு நேரத்தில் போதிய மின்விளக்கு வசதி இல்லாமலும், உரிய மேற்பார்வை இன்றியும் பணி செய்ததாலேயே உயிரிழப்பிற்கு காரணம் என மதுரை மாநகராட்சி இளநிலை பொறியாளர் சக்திவேல் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.