புனேவில் இருந்து விமானம் மூலம் 3,76,000 கோவிஷீல்ட் தடுப்பூசி மருந்துகள் சென்னை வந்தடைந்தன.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தொடர்ந்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாரத் பயோடெக் நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவேக்சின் தடுப்பூசியும், சீரம் நிறுவன தயாரிப்பில் உருவாக்கப்பட்ட கோவீஷீல்டு தடுப்பூசியும் பயன்படுத்தப்பட்டுவருகின்றன.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் போதுமான தடுப்பூசிகள் இல்லாமல் தட்டுபாடு ஏற்ப்பட்டது. இதனால் தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியது. இந்நிலையில் புனேவில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் தமிழக அரசு கொள்முதல் செய்த 9 பார்சல்களில் ஒரு லட்சம் கோவீஷீல்ட் தடுப்பூசிகள் சென்னை வந்தன. இவை தேனாம்பேட்டை மாநில அரசு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.
அதேபோல மத்திய தொகுப்பில் இருந்து வந்த 23 பார்சல்களில் சுமார் 2,76,000 கோவீஷீல்ட் தடுப்பூசி மருந்துகள் சென்னை கொண்டுவரப்பட்டது. இதனை சுகாதாரத்துறை அதிகாரிகள் பெற்றுக்கொண்டு சென்னை விமான நிலையத்தில் இருந்து குளிர்சாதன வாகனம் மூலம் சென்னை பெரியமேட்டில் உள்ள மத்திய மருந்து சேமிப்பு மையத்திற்க்கு கொண்டு சென்றனர்.
அதேபோல் இன்று காலை 60,000 கோவேக்சின் தடுப்பூசிகளும் சென்னை கொண்டுவரப்பட்டன. இதனால் இன்று ஒரே நாளில் 4,36,000 தடுப்பூசிகள் சென்னை கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.







