இன்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் டி20 போட்டிகளில் இந்தியா 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதையடுத்து ஒருநாள் போட்டித் தொடரானது கடந்த 10ஆம் தேதி கவுகாத்தியில் தொடங்கியது. அன்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டனில் இன்று பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி, 39.4 ஓவர்களில், 215 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. இலங்கை அணியில் அதிகபட்சமாக நுவானிடு பெர்னாண்டோ 50 ரன்களும், குசால் மெண்டிஸ் 34 ரன்களும், துனித் வெல்லலாகே 32 ரன்களும் குவித்தனர். இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர்.
இதையடுத்து 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 43.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 64 ரன்களும், ஹர்திக் பாண்டியா 36 ரன்களும், ஷ்ரேயஸ் ஐயர் 28 ரன்களும் குவித்தனர். இன்று நடைபெற்ற போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன்மூலம், இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.