இந்தியா-நியூசிலாந்துக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்த நாட்டு அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் இன்று நடக்கிறது. முன்னதாக ஹாமில்டனில் பெய்த மழை காரணமாக மைதானத்தில் ஈரப்பதம் நிலவியதால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் 15 நிமிட தாமதத்திற்கு பிறகு டாஸ் சுண்டப்பட்டது.
இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது. இந்த போட்டியில் ஷர்துல் தாக்கூருக்குப் பதிலாக தீபக் சாஹரும், சஞ்சு சாம்சனுக்கு பதிலாக தீபக் ஹூடாவும் ஆடும் லெவனில் இடம் பிடித்துள்ளனர்.
இன்றைய ஆட்டத்தில் தோற்றால் தொடரை இழக்க வேண்டியது வரும் என்பதால் முந்தைய ஆட்டத்தில் பந்து வீச்சில் இருந்த பலவீனத்தை சரிசெய்வதுடன் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட புதிய யுக்தியுடன் இந்திய அணி களம் இறங்கும்.
இந்திய அணியில், ஷிகர் தவான் (கேப்டன்), ஷுப்மான் கில், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
நியூசிலாந்து அணியில், கேன் வில்லியம்சன் (கேப்டன்), பின் ஆலன், டெவோன் கான்வே, டேரில் மிட்செல், டாம் லாதம், க்ளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், மைக்கேல் பிரேஸ்வெல், மாட் ஹென்றி, டிம் சவுத்தி, லாக்கி பெர்குசன் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.







