சென்னையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டதாக 204 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சென்னையில் போலீசார் வாகன சோதனையில் அதிவேகமாகவும், பைக் ரேஸ்,பைக் சாகசத்தில் ஈடுபட்டதாக 204 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.  கிறிஸ்துமஸ் தினத்தில் முன்னிட்டு நள்ளிரவில் வாலிபர்கள் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகவும் சாகசம் புரிந்தும் பைக்…

சென்னையில் போலீசார் வாகன சோதனையில் அதிவேகமாகவும், பைக் ரேஸ்,பைக் சாகசத்தில் ஈடுபட்டதாக 204 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

கிறிஸ்துமஸ் தினத்தில் முன்னிட்டு நள்ளிரவில் வாலிபர்கள் இருசக்கர வாகனத்தில்
அதிவேகமாகவும் சாகசம் புரிந்தும் பைக் ரேஸில் ஈடுபடுவதை தடுக்கவும் தீவிர
போலீஸ் கண்காணிப்பு போடப்பட்டது. அந்த அடிப்படையில் போலீசார் வாகன சோதனையில் தேனாம்பேட்டை பகுதியில் நேற்று முன்தினம் இரவு பைக் ரேஸில் ஈடுபட்ட 7 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதேபோன்று தொடர்ந்து நள்ளிரவில் உயர் அதிகாரிகள் நடத்திய தீவிர சோதனையில் இதுவரை 204 இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். குறிப்பாக பைக் ரேஸ் நடக்கும் இடங்களிலும் சிசிடிவி காட்சிகளில் பைக் ரேஸில் ஈடுபட்டவர்களின் காட்சிப்பதிவை அடிப்படையாக வைத்தும் தொடர்ந்து போலீசார் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்த நடவடிக்கை புத்தாண்டு முடியும் வரை தீவிரமாக நடைபெறும் என சென்னை
காவல்துறை தெரிவித்துள்ளது. மரணத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல் என்ற 308 பிரிவு உட்பட குற்றத்திற்கு தகுந்தார் போல் பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் சென்னை காவல்துறை சமூக வலைதளப் பக்கத்தை இணைத்து பொதுமக்கள் பலரும் வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களுடன் பைக் ரேஸ் பைக் சாகசம் உள்ளிட்டவை குறித்து அளிக்கப்படும் புகார்களையும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறாக சிசிடிவி காட்சிகள் மூலமாகவும் பொதுமக்கள் சமூக வலைதளங்கள் மூலம் தெரிவிக்கும் புகார்கள் மூலமாகவும் சென்னை முழுவதும் பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள் அடையாளம் காணப்பட்டு கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.


பைக் ரேஸ் மற்றும் அதிக வேகமாக இருசக்கர வாகனம் ஒட்டிய நபர்கள் மீது வழக்கு
பதிவு செய்யப்பட்டதோடு மட்டுமல்லாமல் 5000 ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்படும்
எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக சென்னை நேப்பியர் பாலம் அருகே இன்று அதிகாலை பைக் ரேஸ் சென்று கொண்டிருந்தவர்களை காவல்துறையினர், விரட்டி பிடித்து கைது செய்துள்ளனர்.

பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஷேக் அஷ்ரப்/20, பச்சையப்பன் கல்லூரி இளங்கலை இரண்டாம் ஆண்டு பொருளியல் துறை மாணவர் கார்த்திக்/19, ஆகிய இருவரை கைது செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

வருகிற புத்தாண்டு முடிகிற வரை வாலிபர்கள் யாரும் பைக் ரேஸில் ஈடுபட்டால்
கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கையும்
விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.