தோட்டக்கலை துறை சார்பில் தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்கப்பட்ட 19 டன் காய்கறிகள்!

எட்டயாபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு தோட்டக்கலை துறை சார்பில் 19 டன் காய்கறிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி,  திருநெல்வேலி,  தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில்…

எட்டயாபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு தோட்டக்கலை துறை சார்பில் 19 டன் காய்கறிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி,  திருநெல்வேலி,  தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.  பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.  இதன் ஒரு பகுதியாக திருச்செந்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர் கனமழை வெள்ளத்தால் ஆறுகள், ஏரிகள்,  குளங்கள் நிரம்பி வழிகின்றன.

இதன் காரணமாக தூத்துக்குடி முற்றிலுமாக முடங்கி போய் உள்ளது.  அந்த நகரத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் பால், குடிநீர், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் சரி வர கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.  இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காய்கறிகள் மலிவு விலையில் கிடைக்கும் வகையில் தோட்டக்கலைத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை! ரூ.50 லட்சம் அபராதம்!

அதன்படி எட்டயாபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு 50 டிராக்டரில் கேரட்,  தக்காளி, வெங்காயம்,  பல்லாரி,  மிளகாய்,  கத்தரிக்காய் உள்ளிட்ட 19 டன் காய்கறிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.  இந்த 50 டிராக்டர்களும் தூத்துக்குடியில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும் பிரிந்து சென்று அங்குள்ள பொதுமக்களுக்கு மலிவு விலையில் விற்பனை செய்யப்பட உள்ளன.

வேளாண்மை துறை ஆணையர், அரசின் செயலாளர் அபூர்வா, தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் பிருந்தா தேவி ஆகியோர் காய்கறிகளை பார்வையிட்டு எட்டயாபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு அனுப்பி வைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.