தமிழ் நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, தவெக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், உலகத்தரமான கட்டமைப்பு என்ற தலைப்பில் மூன்றாவது வாக்குறுதியாக, “தவெக ஆட்சிக்கு வந்தவுடன், தற்போது இருக்கும் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மின் கட்டணக் கணக்கீடு நீக்கப்பட்டு, மாதம் ஒரு முறை மின் கட்டணம் கணக்கிடுவது அமல் படுத்தப்படும்”. என்று கூறப்பட்டிருக்கிறது.
ஆனால் முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் தவெக அரசு அமைந்து இரண்டு மாதங்கள் முடியவிருக்கிறது. இந்நிலையில் தமிழக மக்கள் தொடர்ந்து இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மின் கட்டணத்தைச் செலுத்தி, பெரும் துன்பத்திற்கும், கடும் மனஉளைச்சலுக்கும் ஆளாகி வருகிறார்கள்.
கடந்த திமுக ஆட்சி பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றியதைப்போல, தவெக அரசும் ஏமாற்றி விடுமோ என்ற அச்சம் தமிழக மக்களிடையே பரவலாக எழுந்துள்ளது. எனவே, மக்களின் அச்சத்தைப்போக்க வேண்டிய பொறுப்பு தவெக அரசுக்கு உள்ளது.
இன்றைய மின்வெட்டு பிரச்சனைகள் மற்றும் மின்சார வாரிய ஊழல் குற்றச்சாட்டுகள் தலை தூக்கியிருக்கும் நேரத்தில், இந்த வாக்குறுதி நீர்த்துப்போகும் செயலில் தவெக அரசு இறங்கியுள்ளதோ என்ற சந்தேகமும் வருகிறது. எனவே மாதம் ஒருமுறை மின் கட்டண முறையை அமல்படுத்த தாமதம் ஏன் ஏற்பட்டது. என்ற காரணத்தை தமிழக மக்களிடம் தவெக அரசு விளக்க வேண்டும்.
மேலும், 21ஆம் நூற்றாண்டின் அரசு ; நமது அரசாங்கம் நேர்மை, பொதுவுடமை, வெளிப்படைத்தன்மை மற்றும் மக்கள் நலனை முதன்மையாக கொண்டிருப்பதாக கூறிக்கொள்ளும் தவெக அரசு, உடனடியாக மின் தட்டுப்பாட்டை நீக்கவும், மாதம் ஒரு முறை மின் கணக்கீடு செய்யும் முறையை அமல்படுத்தவும். இனியும் காலதாமதம் இன்றி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




