சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வரும் 12ஆம் தேதியன்று 1,600 தீவிர தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி வரும் 12 ஆம் தேதியன்று தீவிர தடுப்பூசி முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி 1600 சிறப்பு தடுப்பூசி முகாம்களில் 600 மருத்துவர்கள், 600 செவிலியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
ஒரு வார்டுக்கு ஒரு நிலையான தடுப்பூசி முகாமும், இரண்டு நடமாடும் தடுப்பூசி முகாம்களும் செயல்படும். மேலும், தடுப்பூசி தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த 3000 மலேரியா பணியாளர்கள், 4400 காய்ச்சல் முகாம் பணியாளர்கள், 400 அங்கன்வாடி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
ரோட்டரி சங்கம், இந்திய மருத்துவ சங்கம், கல்லூரி முதல்வர்கள், உயர்கல்வித்துறை அதிகாரிகள், சென்னை மாவட்ட நிர்வாக அலுவலர்கள் மற்றும் வணிகர் சங்கப் பேரவைகள் மூலமாகவும் பொதுமக்களிடையே தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்திட சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.








