குடி போதையில் வாகனம் ஓட்டி நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சுமார் ரூ.15 கோடிவரை அபராதம் வசூலிக்கப்பட்டதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை பெருநகர காவல்துறை விபத்தை குறைக்கும் வண்ணம் மோட்டர் வாகனச் சட்டத்தை அமலாக்கம் செய்து சாலை போக்குவரத்து விபத்துகளைக் குறைத்து வருகிறது. விபத்துக்களில் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு குடிபோதையில் வாகனம் ஓட்டுவதும் முக்கிய காரணமாகும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
எனவே குடிபோதையில் வாகனம் ஓட்டுவதற்கு சட்டத்தில் கடுமையான தடுப்பு நடவடிக்கையாக தண்டனை வழங்கப்படுகிறது. இதற்கு அபராதத் தொகை ரூ.10,000/ விதிக்கப்பட்டு இருப்பதால் பலர் அபராதத் தொகையை முறையாக செலுத்துவதில்லை. நீதிமன்றத்தில் உள்ள மெய்நிகர் பிரிவிலிருந்து அவர்களின் தொலைபேசி எண்களுக்கு அழைப்பு வந்தாலும் அபாரதம் செலுத்துவதில்லை. மேலும் 10,369 குடிபோதை வழக்குகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளன.
எனவே இது போன்ற விதி மீறுபவர்களுக்கு நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து சென்னை பெருநகரில் 10 இடங்களில் அமைந்துள்ள அழைப்பு மையங்கள் (Call centers) மூலம் தகவல் தெரிவித்து, கடந்த 24.06.2023 அன்று அவர்களை நேரில் வரவழைத்து வழக்குகளை முடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சிறப்பு நடவடிக்கையின் மூலம் 480 வழக்குகள் தீர்வு காணப்பட்டு அபராதத் தொகையாக ரூ.49,17,000/- விதி மீறிலில் ஈடுபட்டவர்களால் செலுத்தப்பட்டன. கடந்த 5 மாதங்களில் அழைப்பு மையங்கள் மூலம் நிலுவையில் இருந்த 14,638 குடிபோதை வழக்குகள் தீர்க்கப்பட்டு ரூ.15,13,66,600/-அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது.
மேலும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவர்களின் சம்பந்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்ய நீதிமன்றங்களில் ஆணை பிறப்பிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இது போன்று குடிபோதையில் வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவர்களின் அசையும் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கு 371 நீதிமன்ற ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன என்று தெரியப்படுத்திக் கொள்வதாக சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.