மாநிலங்களவையில் இருந்து திமுக எம்.பி.க்கள் 6 பேர் உள்பட 19 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
திமுக எம்.பி.க்கள் கிரிராஜன், கனிமொழி சோமு, அப்துல்லா, சண்முகம், இளங்கோவன் ஆகியோர் மாநிலங்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
முன்னதாக, விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதற்காக காங்கிரஸ் எம்.பி.க்கள் ஜோதி மணி, மாணிக்கம் தாக்கூர் உள்பட 4 பேர் மக்களவையில் இருந்து பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இன்று காலை நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை கூடியது. காலை 11 மணிக்கு அவை கூடியதும் அலுவல் தொடங்கியது. அப்போது ஜிஎஸ்டி வரி விதிப்பு, விலை உயர்வு உள்ளிட்ட விவகாரங்களை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பினர்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுஷ்மிதா தேவ், சாந்தனு சென், டோலா சென் ஆகியோரும் ஒரு வாரத்திற்கு மாநிலங்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் சுஷ்மிதா தேவ், மெளசம் நூர், சாந்தா சேத்ரி, டோலோ சென், சாந்தனு சென், அபி ரஞ்சன் பிஸ்வர், நடிமுல் ஹேக் ஆகியோரும், தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் லிங்கையா யாதவ், ரவிச்சந்திரா வட்டிராஜு, தாமோதர் ராவ் திவாகொண்டா ஆகியோரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதனிடையே, திமுகவைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் எம்.பி.யும் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வி.சிவதாசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் ஆகியோரும் மாநிலங்களவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகின்றன. கடந்த 18ம் தேதி தொடங்கிய கூட்டத் தொடர் ஆகஸ்ட் 12ம் தேதி வரை 18 அமர்வுகளாக நடைபெறவுள்ளன.







