நாடாளுமன்றத்தில் திமுக, அதிமுக-வால் இனி குரல் கொடுக்க முடியாது என புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு அரசு 15 மாதம் வந்து 505 வாக்குறுதிகளை கொடுத்து எந்த ஒரு முக்கியமான வாக்குறுதியையும் காப்பாற்றவில்லை என்றார். குடும்ப பெண்களுக்கு 1000 ரூபாய் வழங்கவில்லை, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தவில்லை, மின் கட்டண உயர்வை அதிகரிக்கிறார்கள் இந்த ஆட்சி மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை என சாடினார்.
திமுக ஆட்சி வந்தபின்பு மக்கள் வேலைவாய்ப்பை இழக்கிறார்கள். மத்திய அரசை மட்டுமே தமிழக அரசு குற்றம் சாட்டுகிறது. பட்டாசு தொழில் முடங்கி வருகிறது. சரவெடிக்கு தடை விதிப்பதால் இந்த தொழிலே கிடையாது. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை உள்ளது. சீனாவில் எவ்வாறு பட்டாசு தயாரிக்கப்படுகிறது என்பதை ஆய்வு செய்து அதன்படி சிவகாசியில் பட்டாசு தொழிலை காக்க வேண்டும் என்றார்.
விருதுநகர் மாவட்டத்தை வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், சிவகாசி கந்தக பூமி கந்தக பூமி என கூறாமல் வேளாண்மை பூமியாக மாற்ற வேண்டும் என கூறினார். டெல்டா மாவட்டங்களை மட்டுமே கவனம் செலுத்தாமல் தமிழ்நாட்டில் மிகவும் வறண்ட பகுதியான விருதுநகர், தூத்துக்குடி, மதுரையை கவனம் செலுத்தி வேளாண்மை திட்டத்தை உருவாக்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். மாநில அரசு பரந்த நோக்கத்தோடு பார்க்க வேண்டும்.
விருதுநகரில் வரக்கூடிய ஜவுளி பூங்கா மக்களுக்கு பாதிப்பு இல்லாத சாயப்பட்டரை இல்லாத வகையில் அமைய உள்ளதா? என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும். பருத்தி கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்றார். பள்ளியில் தேர்ச்சி பெறுவதை வைத்து கல்வி நிறுவனங்கள் வியாபாரமாக்கி வருகின்றன. குழந்தைகளை தொந்தரவு செய்கிறார்கள். இது போன்ற மன அழுத்தங்கள் தடுக்கப்பட வேண்டும் என்ற அவர், இதன் மூலம் உயிரிழப்புகளை தடுக்க முடியும் என்றார்.
புதிய தமிழகம் கட்சி தென் தமிழகத்தின் வளர்ச்சிக்காக குரல் கொடுத்து வருகிறது. தென் தமிழகத்தில் பெரிய வளர்ச்சி எதும் இல்லை. 3 வருடத்தில் MP க்கள் என்ன செய்தார்கள் என தெரியவில்லை. திமுக, அதிமுக வால் இனி நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க முடியாது அவர்கள் தேய்ந்து போன டேப்பரி கார்டாக மாறிவிட்டனர். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக உடன் கூட்டணி தொடருமா என்பது குறித்து தற்போது கூற முடியாது என்றும் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
– இரா.நம்பிராஜன்








