மீனவ சமுதாயத்தை அவமதிக்கும் வகையில் யானை திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அதன் தணிக்கை சான்றிதழை ரத்து செய்யக் கோரிய வழக்கை ஆகஸ்ட் மாதத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
நடிகர் அருண் விஜய் நடிப்பில் இயக்குநர் ஹரி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான
யானை திரைப்படத்துக்கு எதிராக சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தமிழ்நாடு
மீனவர் கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினர் ஜோபாய் கோமஸ் என்பவர் வழக்குத்
தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், யானை திரைப்படத்தில் ராமநாதபுரம், தங்கச்சிமடம், பாம்பன் பகுதி மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை சமூக விரோதிகளாக காட்டியுள்ளதாகவும், மீனவர்களை கூலிப் படையினராகவும், குழந்தைகளை தவறாக பயன்படுத்துபவர்களாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சில காட்சிகள் மத உணர்வைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும், கச்சத்தீவு
பிரச்னையும் இந்தப் படத்தில் கையாளப்பட்டுள்ளதாகவும், அந்த விதம் தங்கள்
உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும் சுட்டிக் காட்டியுள்ளார்.
உயிரைப் பணயம் வைத்து நடுக்கடலில் மீன் பிடித்து, ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி
ரூபாய் அன்னிய செலாவணி ஈட்டித்தரும் விளிம்புநிலை மக்களான மீனவர்களை
அவமதிக்கும் வகையில் உள்ள காட்சிகளுடன் படத்தை தொடர்ந்து திரையிடத் தடை விதிக்க வேண்டும் எனவும், படத்துக்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில்
விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் காணொலி காட்சி மூலம்
ஆஜராவதில் இடையூறு ஏற்பட்டதால், வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 1ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா