10 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்தவர்கள் தப்பி ஓட்டம்!

கர்நாடகாவில் 10 வயது சிறுவனின் முதுகில் கனமான கற்களை சுமக்க வைத்து துன்புறுத்தியதால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா விப்பனாசி கிராமத்தை சேர்ந்தவர் நாகையா ஹிரமத் – ஜெயஸ்ரீ தம்பதியினர். இவர்களுக்கு 10…

கர்நாடகாவில் 10 வயது சிறுவனின் முதுகில் கனமான கற்களை சுமக்க வைத்து துன்புறுத்தியதால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா விப்பனாசி கிராமத்தை சேர்ந்தவர் நாகையா ஹிரமத் – ஜெயஸ்ரீ தம்பதியினர். இவர்களுக்கு 10 வயதில் மகன் உள்ளார். கடந்த மார்ச் 16-ம் தேதி அன்று அருகிலுள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க அந்த சிறுவன் சென்றுள்ளார். ஆனால் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன பெற்றோர் மகனை தேடி மளிகை கடைக்கு சென்றனர். அப்போது கடையில் இருந்து பணத்தை திருடியதாக கூறி கடை உரிமையாளர்கள் அச்சிறுவனை கடைக்கு உள்ளே அடைத்து வைத்திருப்பதை பார்த்தனர். கடை உரிமையாளர்கள் அச்சிறுவனை துன்புறுத்தியத்தோடு மட்டுமில்லாமல் வீட்டிற்கு விடவும் மறுத்துள்ளனர்.

கடை உரிமையாளர்களிடம் சிறுவனின் பெற்றோர் தங்கள் மகனை விட்டுவிடும்படி கெஞ்சிகேட்டும் அவர்கள் மதிக்கவில்லை. மேலும், சிறுவனின் முதுகில் கனமான கற்களை சுமக்க வைத்து கொடூரமாக தாக்கியுள்ளனர். பின்னர் மாலையில் சிறுவனை வீட்டிற்கு விடுவித்ததை தொடர்ந்து அந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இறந்த சிறுவன், மருத்துவமனை படுக்கையில் இருந்து தனக்கு நடந்த சம்பவத்தை வீடியோவில் விவரிந்திருந்தார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர், தனது முதுகில் கனமான கல்லை வைத்து சுமக்க சொல்லி கொடூரமாக தாக்கியதாகவும், தன்னைக் கொல்ல முயற்சித்ததாகவும் கூறி சிறுவன் அழுததாக வீடியோவில் பதிவாகியிருந்தது.

இதுகுறித்து சிறுவனின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கடை உரிமையாளரான பிரவீன் கரிஷெட்டர், மற்றும் அவருடைய குடும்பதினர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் தப்பி ஓடிவிட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.