இலங்கையில் இருந்து மூன்று மாத கைக்குழந்தையுடன் மூன்று குடும்பத்தை சேர்ந்த மேலும் 10 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்துள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அத்துடன், அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக இலங்கைத் தமிழர்கள் தனுஷ்கோடி கடல் வழியாக தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜஸ்டின், அவரது மனைவி அவுஸ்யா அவரது 3 மாத கைக்குழந்தை, மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயக்குமார், அவரது மனைவி யோகேஸ்வரி, அவரது இரு மகள்கள் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த புஷ்பம் மற்றும் அவரது மகன் பிரபாகரன் மற்றும் உட்பட மூன்று குடும்பத்தை சேர்ந்த 10 பேர் நேற்று இரவு மன்னாரில் இருந்து ஒரு பைபர் படகில் புறப்பட்டு இன்று அதிகாலை 1 மணியளவில் நடுத்திட்டு பகுதியில் வந்திறங்கினர்.
தகவலறிந்த ராமேஸ்வரம் கடலோர போலீசார் இலங்கைத் தமிழர்களை மீட்டு, அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இலங்கையில் குழந்தைகளை வைத்து வாழ முடியாது சூழல் ஏற்பட்டுள்ளதால் பலத்த மழை மற்றும் சூறைக் காற்றுக்கு மத்தியில் பைபர் படகில் உயிரை பணயம் வைத்து தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வந்தாக இலங்கைத் தமிழர்கள் தெரிவித்தனர்.
விசாரணைக்கு பின் 10 பேரையும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்படுவார்கள் என கடலோர போலீசார் தெரிவித்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி முதல் இன்று வரை இலங்கையில் இருந்து 198 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.







