சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்கள் – ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைப்பு..!

சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களும், ஆளுநரின் ஒப்புதலுக்காக ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முந்தைய அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்கள்,  தற்போதைய திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 8 மசோதாக்கள் என 10…

சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களும், ஆளுநரின் ஒப்புதலுக்காக ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

முந்தைய அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்கள்,  தற்போதைய திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 8 மசோதாக்கள் என 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை நிறுத்திவைப்பதாக குறிப்பிட்டு,  அதனை ஆளுநர் ஆர்.என்.ரவி, கடந்த 13-ஆம் தேதி திருப்பி அனுப்பினார்.  இதில், பல்கலைக் கழக வேந்தர்களாக முதலமைச்சரை மாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே,  சில மசோதாக்களை ஆளுநர் நிறுத்திவைத்ததாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து,  இந்த மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றுவதற்காக,  தமிழ்நாடு சட்டப் பேரவை சிறப்பு கூட்டம் இன்று கூட்டப்பட்டது.  இந்த கூட்டத்தில்,  10 மசோதாக்காளை நிறைவேற்றுவதான அரசினர் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார்.

அப்போது பேசிய அவர்,  10 மசோதாக்களை காரணம் எதையும் குறிப்பிடாமல்,  அனுமதி அளிப்பதை நிறுத்தி வைத்திருப்பதாகத் தெரிவித்து,  ஆளுநர் திருப்பி அனுப்பியது ஏற்புடையது அல்ல என்று தெரிவிக்கப்பட்டது.  அரசியல் சாசன சட்டப்பிரிவு 200-ன்கீழ், மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டு,  ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும் போது,  அதற்கு ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும்  என்று பேசினார்.

இதனைத் தொடர்ந்து,  ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றித் தருமாறு அந்தந்த துறை அமைச்சர்கள் முன்மொழிந்தனர்.  இதன்படி, அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு மீன்வள பல்கலைக் கழக மசோதா, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக மசோதா ஆகியவை மீண்டும் தாக்கல் செய்யப்பட்டன.

இதேபோல, திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு பல்கலைக் கழகங்கள் மசோதா,  டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழக மசோதா, டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழக மசோதா,  வேளாண்மை பல்கலைக் கழக மசோதா,  தமிழ்நாடு பல்கலைக் கழகங்கள் இரண்டாவது திருத்த மசோதா,  தமிழ் பல்கலைக் கழக இரண்டாவது திருத்த மசோதா,  மீன்வள பல்கலைக் கழக மசோதா, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக மசோதா ஆகியவை தாக்கல் செய்யப்பட்டு மீண்டும் நிறைவேற்றப்பட்டன.

சட்டப்பேரவையில் இருந்து பாஜக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த நிலையில்,  10 மசோதாக்காளும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து மாலை சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களும், ஆளுநரின் ஒப்புதலுக்காக ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.