ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறி விவசாய நிலத்திற்குள் புகுந்த காட்டெருமையால் விவசாயிகள் அச்சமடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகத்தோப்பு மேற்கு
தொடர்ச்சி மலை அடிவார பகுதி உள்ளது. இந்த மலைப்பகுதியில் ஏராளமான
காட்டெருமைகள், யானைகள், புலிகள், சிறுத்தைகள், மான்கள் உள்ளிட்ட பல்வேறு
வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
கடந்த 10 நாட்களாக இரவு நேரங்களில் யானை கூட்டம், மேற்கு தொடர்ச்சி மலை
அடிவார பகுதியில் உள்ள சாலையை கடந்து விவசாய தோட்ட நிலங்களுக்கு சென்று வாழை, கொய்யா, தென்னங்கீற்று உள்ளிட்ட மரங்களை சேதப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர்- ராஜபாளையம் செல்லும் வாழைகுளம் வனப்பகுதியில்
இருந்து பட்டப் பகலில் காட்டெருமை ஒன்று வனத்தை விட்டு வெளியேறி அருகே உள்ள
தோட்ட பகுதிக்கு சென்றுள்ளது.
இதனை அந்த பகுதியில் சென்றவர்கள் படம் பிடித்து வனத்துறையிடம் தெரிவித்தனர். கடந்த 10 நாட்களாக யானைகளால் விவசாயிகள் அல்லல்பட்டு வந்த நிலையில் தற்போது காட்டெருமைகளும் சாலையை கடந்து விவசாய தோட்ட பகுதிக்கு செல்வது விவசாயிகளையும் சாலையில் செல்பவர்களையும் கவலை அடைய செய்துள்ளது.
வனத்துறையினர் வனவிலங்குகளை காட்டிற்குள் விரட்டவும், விவசாய பகுதிக்குள் வனவிலங்குகளை வரவிடாமல் செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.







