மக்கள் நலனைக் காக்க மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி?

தமிழ்நாடு அரசின் அதிகாரங்களுக்குட்பட்ட நடவடிக்கைகளை எடுத்துவிட்டோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எரிவாயு தட்டுப்பாட்டை எதிர்கொள்ள தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை பட்டியலிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்கள் நலனைக் காக்க மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “உணவகங்கள், டீக்கடைகள், Cloud Kitchen உள்ளிட்ட உணவு உற்பத்தித் தொழிற்கூடங்கள் LPG-க்குப் பதிலாக மின் அடுப்புகளைப் பயன்படுத்தும்போது ஏற்படும் கூடுதல் மின்சார நுகர்விற்கு. ஒரு யூனிட்டுக்கு ரூ.2 மானியம்!

MSME நிறுவனங்கள் மின் அடுப்புகள், மின் சூடேற்றிகள் கொள்முதல் செய்வதற்கு மானியத்துடன் கூடிய கடன்!

தமிழ்நாட்டில் 60,898 தொழிற்சாலைகள் LPG, CNG போன்ற எரிபொருட்களுக்கு மாற்றாக மண்ணெண்ணெய், RDF, HSD, பயோமாஸ் போன்றவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு TNPCB இசைவாணை (CTE/CTO) பெறத் தேவையில்லை.

இந்த இடர்ப்பாட்டினால் மீதமாகும் தேவைக்கு அதிகமான பாலினைப் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து ஆவின் பால் கூட்டுறவுச் சங்கங்களில் கட்டுப்பாடுகள் ஏதுமின்றிப் பெற்றுக்கொள்ள ஆணை.

உணவகங்கள் மூடப்படும் வேளையில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தினைக் கருத்தில் கொண்டு, காய்கறிகள் மற்றும் பழங்களை 194 உழவர் சந்தைகளில் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் அவர்கள் விற்பனை செய்துகொள்ள அனுமதி.

மாநில அளவில் வணிக நிறுவனங்களுக்கு முறையாக LPG சிலிண்டர் அளவீட்டினை ஒதுக்கீடு செய்து கண்காணிக்க, தலைமைச் செயலாளர் அவர்கள் கண்காணிப்பில், அரசு உயர் அலுவலர்கள் கொண்டகுழு.

மாவட்ட அளவில் எண்ணெய் விநியோக நிறுவனங்களின் பொறுப்பு அலுவலர்களை உள்ளடக்கிய மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையிலான குழு. இந்த மாதம் பொது விநியோகத் திட்டத்திற்குக் கூடுதலாக 3,228 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க ஆணை.

மேற்காசிய போர் காரணமாகப் பொதுமக்கள் பாதிப்படையக் கூடாது எனத் தமிழ்நாடு அரசின் அதிகாரங்களுக்குட்பட்ட நடவடிக்கைகளை எடுத்துவிட்டோம்.

மக்கள் நலனைக் காக்க ஒன்றிய அரசு என்ன செய்யப் போகிறது”? இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.