’வெற்றி வந்தவுடன் இப்படி நடந்துக்கொள்ளக் கூடாது’என மாநாடு வெற்றி விழாவில் சிம்பு குறித்து எஸ். ஏ. சந்திர சேகரின் கருத்தால் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த நடிகர் சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் 25 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவரும் நிலையில் படக்குழு சார்பில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி, சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி அமரன், மனோஜ், ஒய்.ஜி. மகேந்திரன், எஸ்.ஏ சந்திரசேகர், இயக்குனர் வெங்கட் பிரபு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் பங்கேற்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வாய்ப்பளித்ததற்கு நன்றி கூறி தனது உரையை தொடங்கிய எஸ்.ஏ. சந்திர சேகர், ”இந்த படம் இவ்வளவு பெரிய வெற்றி பெற்றுள்ளது ஆனால், படத்தின் நாயகனான சிம்பு ஏன் இந்த நிகழ்வில் பங்குபெறவில்லை? சிம்பு நிகழ்வில் பங்கேற்காதது, எனக்கு மனத்திற்கு காஷ்டமாக உள்ளது. படப்பிடிப்பின் போது எப்படி இருக்கிறார்களோ படத்தின் வெற்றிக்கு பிறகும் அப்படியே இருக்க வேண்டும் அப்போது தான் அடுத்த வெற்றி கிடைக்கும்”, என சூசகமாக விமர்சித்தார் எஸ்.ஏ. சந்திர சேகர்.
”அதேபோல், வாரிசு அரசியல் பற்றி இந்த படம் பேசியுள்ளதால் தமிழ்நாட்டு மக்களிடம் சென்று சேர்ந்துள்ளது. தற்போது பல படங்களில் முதலமைச்சராக நடிக்க கேட்கிறார்கள், ஆனால், தவறான முதலமைச்சர் என்றால் சொல்லுங்கள் படத்தில் நடிக்கிறேன். நடைமுறையில் உள்ளதை செய்கிறேன். முதலமைச்சர் நல்லவரா, யாராவது நம்புவீர்களா, காமராஜருக்கு பிறகு நல்ல முதலமைச்சரை பார்த்ததில்லை”, என எஸ்.ஏ.சந்திர சேகர் கூறிய கருத்தும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
எஸ்.ஏ.சந்திர சேகரை தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு பேசியதாவது, ”இசுலாமிய இளைஞர் தொடர்பான கதை என்று கூறியவுடன் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார் சிம்பு. இந்த படத்திற்காக பட தொகுப்பாளர் பிரவின் கே.எல்.க்கு தேசிய விருது கிடைக்கும். சிம்பு பாக்கியசாலி ஏனென்றால் அவ்வளவு நேர்மையான ரசிகர்கள் அவருக்கு உள்ளார்கள். அவர்களால் தான் இந்த படம் பெரிய வெற்றி பெற்றது. கொரோனா ஊரடங்கு காரணமாக ‘மாநாடு ‘ படக் காட்சிக்கு கூட்டம் கூட்டுவது சிரமமாக இருந்தது , எனவே படத்தை பாதியில் நிறுத்தி வைத்து கொரோனா காலகட்டத்திற்கு ஏற்ப சிம்பு , எஸ்.ஜே.சூர்யாவை வைத்து புதிய கதையில் வேறு படம் எடுக்கலாம் என சுரேஷ் காமாட்சியிடம் கூறினேன். என்றாலும் மாநாடு படத்தை முதலில் முடித்து விடுவோம் என சுரேஷ் காமாட்சி கூறிவிட்டார்.”
மாநாடு திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுவரும் இந்நிலையில், எஸ்.ஏ.சந்திர சேகர் கூறிய கருத்து சிம்பு ரசிகர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.