வெற்றி கோப்பையை கையில் வாங்கும் போது கண் கலங்கி நின்றதாக, இந்திய கிரிக்கெட் அணி வீரர் நடராஜன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கடந்த 2 மாதம் கனவு போல இருந்ததாகவும், இந்த வெற்றியை பெரிய சாதனையாக கருதுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், கடின உழைப்பு இருந்தால் நிச்சயம் சாதிக்கலாம் என்றும், அதற்கு நானே சாட்சி என்றும் கூறியுள்ளார். எந்த போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தாலும் கட்டாயம் விளையாடுவேன் எனவும், நான் மட்டுமின்றி அணியில் உள்ள அனைவரும் ஒன்றாக இணைந்து விளையாடியதால் தான் வெற்றி கைவசமானது என்றும் கூறியுள்ளார்.
பிறந்த குழந்தையை பார்க்க வேண்டும் என்கிற ஆவலை விட, நாட்டுக்காக விளையாடியதில் தான் மகிழ்ச்சி அடைந்ததாக பெருமிதம் தெரிவித்துள்ளார். சக வீரர்கள், பயிற்சியாளர்களின் ஒத்துழைப்பால் தான் இந்த வெற்றியை அடைந்ததாக பெருமிதம் தெரிவித்துள்ளார். தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்பதால் அடுத்தடுத்து 3 போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்ததாக கூறியுள்ளார்.







